இது தவறாகயிருப்பின் என்னில் ஏதுமில்லை…
21 12 2007சமிபத்திய இரு மரணங்கள் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அதே நேரத்தில் ஆற்றாமையின் வெளிப்பாடு இதுநாள் வரை அழுகை என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்னில் இது மாறுபடத்துவங்கியது. சீனுதான் சொல்வான் தெருமுனை வரைக்கும் சிரித்து பேசிக்கொண்டு வருவார்கள் துக்க வீடு நெருங்கியதும் அழ ஆரம்பித்துவிடுவார்கள் என்று…. ஒரு வீட்டிற்கு விருந்தினராய் செல்லும்பொழுதும் பழம் பிஸ்கட் என்று வாங்கி கொண்டு செல்வதையும்…. எதுவும் வலிந்து கொண்டு வருவது கூடாது என்று இம்மரணங்கள் உணர்த்தியது. இல்லை 2000- ம் மைல்களுக்கு அப்பால் உள்ள இடைவெளியின் காரணமாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
இத்தருணங்களில் உணர்வுகளால் ஒடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அலுவலக பணியினூடே என்னுள் அடைத்துக் கொண்ட மௌனம் பணிசூழலில் மூழ்கிவிட்டாலும் அவ்வப்பொழுது வரும் தொலைபேசி அழைப்புகள் என்னடா போன்செய்தாயா எல்லாரும் வந்துட்டாங்களாமே என்பதூடே மீட்டெடுக்கிறேன். தடையற்றதாய் நகரும் இக்காலத்தில் என்னைமட்டும் ஒருவித இறுக்கம் சூழ்ந்து கொள்கிறது. தொலைபேசி விசாரிப்புகளுக்கு பழக்கப்படாதவனாய் சுருண்டு படுத்துக்கொள்கிறேன்.
பலதரப்பட்ட உறவுகளுடன் தொடர்பு கொண்டபொழுது வந்து விழுந்த சொல்லாடல்கள் எல்லாம் மாறுபட்டதாய் இருக்கின்றன. மாற்றம் பெற்றதாகவும்…. என்சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு நான் இன்னும் எதிர்பார்த்தே காத்திருக்கிறேன். நேற்று இன்று என்ற ஒப்பீடுகள் எல்லாம் என் முன் உடைத்தெறியபட்ட போதும், மனிதம் என்பது பொய்யோ என்ற எண்ணப்பாடும் சொல்லாமலே எழுந்து அடங்குகிறது.
உறவுகளுக்குள் நிகழ்ந்த மரணம். உயிர் ஒன்றுதான் என்றாலும் அம்மா, அப்பா என்ற வேறுபாடு இருக்கத்தானே செய்கிறது. நாம் எடுக்கும் நிலைப்பாடுகளின் மீது உணரவே முடிகிறது. ஒருகணம் நானும் ஸ்தம்பிக்ககூடும் அப்பொழுதும் இதே நிலைப்பாடு தொடருமா என்றால் கிடையாது. இழத்தலின்போதும் இருத்தலின் நிதர்சனம் இவர்களுக்கு புரிவதில்லை. மீண்டும் கண்ணை கசக்கிக்கொண்டோடவே பழக்கப்படுகின்றனர்.
பொய்யான வாழ்வினை இதுநாள்வரை சுமந்துகொண்டு திரிந்தேனா என்ற ஐயப்பாடு. உணர்வுகளுடன் இருக்கவே ப்ரயத்ணப்படுகிறேன். எப்பொழுது தூங்கினேனோ காலையில் கண்உறுத்தலுடன் எழுந்திரித்தேன்.
நினைவுகளுடன்: பாண்டித்துரை
மறுமொழிகள் : 4 மறுமொழிகள் »
வகைகள் : கட்டுரை

அண்மைய மறுமொழிகள்