“கூட்டாஞ்சோறு”

22 07 2008

 

எழுதவந்து எத்தனைநாளாயிற்று, என்ன இதுவரை எழுதியிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்திடாமல், என்னோடு இசையக்கூடும் என்றறிந்த 8-நண்பர்களிடம் ஒரு வருடத்திற்கும் முன்னால் பேசியபொழுது கூட்டாஞ்சோறு ஆரம்பமாகியது.

 

மரபு, புதுக்கவிதை, நவீனத்தைநோக்கிய பார்வை என பலரின் கவிதைகள் ஒருங்கே தொகுத்தால் எல்லோருக்குள்ளும் ஒரு நினைவு, நிறைவு இருக்கக்கூடும் என்றெண்ணியபொழுது, சிதைவுறும் கனவுகளாய் சில பிரச்சினைகள். ( ஒவ்வொரு பிறப்பின் ரகசியமும் பிரச்சினைகளை கடந்தபின்னர்தானோ!? ) காரணம் சொல்லாமல் இரண்டு நண்பர்கள் விலகிட, காரணத்தைச் சொல்லி ஒரு நண்பர் விலகிட, இன்னொரு நண்பரோ செல்லாது, செல்லாது; நான் என்னத்தைப்பா கவிதை எழுதிட்டேன். ஏதோ இங்க வரணும் உங்களைப் பார்க்கணும்! அதுக்காக எழுதுவதாக சொல்ல, இதன் பின்னர்தான் யோசிக்கத்தோன்றியது……

 

கூட்டாஞ்சோறு இப்படியாகத்தான் பின்னர் உருமாறியது படைப்பின் பிரம்மா-க்களாக. நான் (பாண்டித்துரை), கோட்டை பிரபு, செல்வா, காளிமுத்துபாரத் ஆகிய நால்வரும் கவிதைகளையும், கத்தைகளையும் சமமாகப் பகிர்ந்துகொண்டோம். கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோவும், .வீ.விசயபாரதியும் வாழ்த்துரையும், அணிந்துரையும் தந்துவிட முகப்பு ஓவியத்திற்காக மட்டுமே ஆறு மாதகாலத்திற்கும் மேலான காத்திருப்பு. ஓவியம் தருவதாக ஒப்புதல்தந்த நண்பரோ பணிச்சூழல் காரணமாய் பறந்தபடியிருக்க பிரம்மா பிறப்பானா என்ற கேள்விக்குறி என்னிலும் என் பின்னணியிலும்………..

 

செல்வாவும், காளிமுத்துபாரத்தும் நான் எது சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி என்ற மனநிலையில். கோட்டைபிரபு மட்டும்தான் சாதக பாதகங்களை கொஞ்சம் அலசிப்பேசுவதாய் என்ன பாண்டி தொடருவோமா வேண்டாமா என்று………

 

முடியாதபட்சத்தில் கலைத்திடுவோம் என்பதாக ஜனவரித் திங்கள் ஒருநாள் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருப்போம் என்று அவன் முகத்தைப் பார்க்காதவனாய் முன்மொழிந்தேன்.

 

அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் எல்லாம் கவிஞர் அய்யப்பமாதவனால்! சென்னை - தஞ்சைக்கு இடையேயான சில பயணங்கள், ஓவியம் அச்சாக்கப்பணி என்று ஒவ்வொன்றையும் தனதாக்கிக்கொண்டு பிரம்மா அச்சுக்கோர்ப்பதிலிருந்து அழகாய் வெளிவருவதுவரை எங்களுக்கான கவலைகள் யாவற்றையும் சுமந்துகொண்டார்.

 

சசியும், சின்னாவும், அறிவும்- கூடத்தான் அவ்வப்பொழுது பிரம்மா பிறத்தலின் ரகசியங்களை அறியத்துடிப்பதாகவும், இடைஇடையே குங்குமப்பூ, குமட்டும் மருந்துகள் என்று ஆலோசிப்பதாகவும் இருந்த

 

பிரம்மா

 

இதோ இன்று ( 20.07.08 )  சப்பரத்தில் ஏற்றப்பட்டு உங்களின் முன்னே வலம்வந்துகொண்டிருக்கிறான். இன்முகம் காட்டி பிரம்மனைச் சுமந்தபடியே .வீ.சத்தியமூர்த்தி, கண்டனூர்சசிகுமார், சின்னபாரதி, அறிவுநிதி, மணிசரவணன் என்று முகம்காட்டா இன்னும் எத்தனையோ கவிநண்பர்கள்………

 

பிரம்மா பிறக்கும்பொழுது அதன் தொடர்ச்சியாய் கனத்த மழையையோ, கனத்த வெயிலையோ நாளை தோன்றுவிக்கலாம்

 

குழந்தைக்கான குதூகலத்துடன்

பாண்டித்துரை





சொல்லப்படாத மௌனங்களினூடே

22 07 2008

 

                                                                        (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி உங்களுக்காக)

 

எதைபற்றி வேண்டுமானலும் பேசுங்கள் என்று நூலாசியர் அற்புதமான ஒரு சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் சுதந்திரம் என்று கிடைத்ததுமே பொறுப்பு வந்துவிடுகிறது  என்றுச் சொல்லி வாழ்க்கை இலக்கியம் என்ற தலைப்பில் அவர் பேசியவை

 

 

நவீனத்துவவாதிகள் மரபை எதிர்ப்பதில்லை. மரபின் நீட்சியாகத்தான் நவீனத்தை பார்க்கிறார்கள். நவீனத்துவம் என்கிற ஒரு விசயத்தை நாம் உணர ஆரம்பித்துவிட்டால் எந்த ஒருவிசயமும் நமக்கு புரிபடாமல் இருக்கப்போவதில்லை, ஏன் என்றால் அதில் சொல்லப்படாத மௌனங்கள் இருக்கிறது. அந்த மௌனத்தை உணர்வது எப்படி என்பதை  சின்ன ஒரு வழிமுறையாக நான் காட்டுகிறேன். இதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. இது  நவீனத்துவம் நமக்கு கொடுக்கும் சுதந்திரம். நமக்கு கொடுக்கப்பட்ட அற்புதமான பொறுப்பு. இந்த பொறுப்போடு அணுகும்பொழுது நவீனத்துவம்  என்பது உங்களுக்கும் புரியும்.

 

இலக்கியவாதிக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளிதான் உள்ளது, அதை எப்பொழுது வேண்டும் என்றாலும் இருவரும் தாண்டிக்கொள்ளலாம். ஒரு நல்ல வாசகன் தனது வாசகத்தன்மையை விட்டு சற்றே விலகினால் நல்ல எழுத்தாளனாக, விமர்சகனாக எந்த நிமிடமும் மாறலாம், இந்த சுதந்திரம்தான் நவீனத்துவம். எப்பொழுது உங்களின் வாழ்க்கையை நேர்மையாக பதிவுசெய்து எழுத ஆரம்பிக்கிறீர்களோ, அப்பொழுது மிகச்சிறந்த இலக்கியவாதி நீங்கள்தான். சாதரணமான மனிதனின் வாழ்க்கையும் கவிதையாக, சிறுகதையாக, கட்டுரையாக, நாவலாகவோ உருவெடுப்பதுதான் நவீனத்துவம் இதை புரிந்தால் நாம் எல்லோருமே இலக்கியவாதிதான்.


 

பல்வேறு சிதைவுகளுக்கு பின் நமக்கு கிடைத்த மிகச்சிறிய அளவிலான சங்க இலக்கியங்களில் நாம் முழுவதயும் படிப்பதில்லை. திரும்ப திரும்ப சில காப்பியங்களை தான் படிக்கின்றோம் மணிமேகலை, சிலப்பதிகாரம் இதைதாண்டிய சிறப்பான மூன்றாவது இலக்கியத்தின் பக்கம் நாம் செல்வது இல்லை. ஏன் எனில் அதில் கடினமான நடையோ அல்லது நமக்கு பிடிக்காத விசயங்களோ  இருக்ககூடும்போல.  இது ஏன என்று தெரியிவில்லை, இது பழங்கால இலக்கியங்களின் நிலமை. இப்பொழுது கடந்த 100ஆண்டுகளாக நவீனத்துவம் வளர்ந்தபிறகு தற்பொழுது தமிழ் இலக்கியத்தின் நிலைமை என்ன என்றால், ஓலைச்சுவடியிலிருந்து முதலில் எழுத்துக்கள் அச்சேறின. நவீனத்துவம் என்பது உலகம் அனைத்திலும் மனிதனின் வாழ்க்கை முறையிலும் புகுந்து கொண்டது. பண்டிதர்கள் கையிலிருந்த இலக்கியம் பாமரனின் கையில் அச்சுக்கோர்க்கப்பட்டபொழுது புது வடிவம் பெற்றது. இலக்கணம் தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால் மட்டுமே ரசிக்க அனுபவிக்க கூடிய இலக்கியங்களை, சாதரண பேச்சுத் தமிழில் உரைவிளக்கம் கற்றுத்தர ஆசிரியர்கள் எதுவும் தேவையில்லை என்ற சுதந்திரம் வாசனுக்கும் எழுத்தாளனுக்குமான இடைவெளியை குறைத்தது.

 

ஒரு தீவிர வாசகன் எந்த கணமும் ஒரு எழுத்தாளனாகவோ, விமர்சகனாகவோ மாறக்கூடிய சாத்தியங்கள் இதனால் அதிகமாயின. எழுத்தாளருக்கு கிடைத்த எல்கையற்ற சுதந்திரத்தில் எட்டமுடியாத சிகரங்களையும் எட்டமுடிந்தது, அதள பாதாளத்திலும் அவனால் விழ முடிந்தது. மொழியை வசப்படுத்தி அதன் வசீகரங்களோடு சாதாரண வாழ்வின் அசாதரண தருணங்களை கவிதை, சிறுகதை, கட்டுரை என பல வகைகளில் பதிவுசெய்யப்பட்டன. இதில் நவீனத்துவம் என்ற சொல் அவ்வப்பொழுது அதுவரை கட்டிக்காத்துவந்த வாழ்வியல் மரபுகள் பண்பாடு என்று உடைத்தெறிய துவங்கியது.

 

மனிதனின் நுண்ணிய உணர்வுகளை பதிவுசெய்வதுதான் நவீன இலக்கியங்கள். வெறும் சுவாரஸ்யத்திற்காக எழுதப்பட்ட இலக்கியங்களாக தொடர்கதைகள் வெளிவந்தது. இவை மத்திய வர்க்கத்திற்கு சுவைமிகுந்ததாக இருந்தது. அதன் பின் கனவுகளால் நெய்யப்பட்ட இலக்கியங்கள் பிரபலடைந்தது இது யாருக்காக என்றால் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருவடிகாலாக குறிப்பாக பெண்களுக்காக வெளிவந்தது. லச்சியவாதிகளை முன்னிறுத்தி ஒரே நேர்கோட்டில் ஒரு தனிமனிதன் அவன் சார்ந்திருந்த கொள்கைகள் சமூகத்தின் மீது கொண்ட முரண்பாடுகள் என்று தொடர்ந்தவை இன்றுவரை வெற்றிகரமான ஒரு இலக்கியத்திற்கான உக்தியாக கருதப்படுகிறது.

 

அறிவியல் பயன்பாடுகள், பெண்கல்வி, பெண்ணுரிமை, கம்யுனிசம், சோசலிசம் என்று எழுபதுகளில் திரும்ப திரும்ப பேசப்பட்டது. இதையும் ிலர் ஏற்றுக்கொண்டாலும் நவினத்துவம் இலக்கியத்தில் வந்தபொழுது மட்டும் இதையெல்லாம் எழுதுவார்களா என்று பெரிதாக குரல் எழுந்தது.

 

இலக்கியத்தில் மட்டும் ஏன் இதை எதிர்த்தார்கள் என்றால் நாம் செய்வனவற்றை ஆவணப்படுத்துகிறோம். பொது அடையாளங்களை எங்கோயோ எழுத்தின் மூலம் சீர்குலைக்க வருவதாக நினைக்கின்றனர்.  பரவலாக பேசப்பட்டு எழுதப்பட்டுவரும்பொழுது அது உண்மையாகிவிடுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது.  கண்ணுக்கு தெரியாத சக்தி நம்மிடமுள்ள பொதுஅடையாளங்களை அழிக்கிறதே என்ற உணர்ச்சி வரும் பொழுது நவீனத்துவத்தை எதிர்க்கிறார்கள் இதை ஏற்றுக்கொள்ளலாமா மறுபரிசீலனை செய்யலாமா என்று யோசிக்கும் பொழுது பின்நவீனத்துவம் என்ற