சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு

28 09 2009

 சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்கள் இயக்கிய ‘மிருகம்‘ நாடகம் பற்றி மலேசிய எழுத்தாளர் திரு.கே.பாலருமுகன் அவரது வலைப்பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவை எனது சொந்த தலைப்பு மற்றும் சில வரிகளை இணைத்து எனது வலைதளத்தில் பதிவிட்டிருந்தேன். ஆனால் நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் திரு.இளங்கோவன் அவர்களை காயப்படுத்துவதாக நண்பர்கள் வாயிலாகவும் நான் முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்கு 23.09.2009 அன்று திரு.இளங்கோவன் அவர்களிடம் இருந்து வந்திருந்த மின்னஞ்சலை 27.09.2009 இன்று எனது மின்னஞ்சலுக்கு எனது பழைய அலுவலக அதிகாரிகள் அனுப்பியிருந்தனர், அந்த மின்னஞ்சல் வாயிலாகவும் அறிந்துகொண்டேன்.

அவர் மனதை காயப்படுத்திய அந்த வரிகளை எனது பழைய பதிவிலிருந்து நீக்கிவிட்டேன்.

திருத்தப்பட்ட பதிவினை பார்க்க:மிருகம் நாடகம் பற்றி மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் பார்வை

மேலும் நான் பல நண்பர்களுக்கு அந்த பதிவை படிக்கச் சொல்லி குறுந்தகவல் அனுப்பியதாக திரு.இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக அறிய நேர்ந்தது. நான் யாருக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பினேனோ அவர்களை விசாரித்தால் அந்த குறுந்தகவலின் சாரம் என்ன என்பதை அறிய நேரலாம். மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்தை அவரது வலைபதிவில் படிக்க நேர்ந்தது. அதன்பின் கே.பாலமுருகனின் வலைபதிவை படிக்கச் சொல்லியே குறுந்தகவல் அனுப்பினேன். மேலும் என்னைத்தவிர யாரும் பார்க்காத எனது வலைதளத்தை பாருங்கள் என்று யாருக்கும் குறுந்தகவல் அனுப்பவில்லை.

இந்த பதிவின் வாயிலாக திரு.இளங்கோவன் அவர்களை காயப்படுத்திய அந்த ____________  வார்த்தையை நீக்கி விட்டேன். மேலும் திரு.இளங்கோவன் அவர்களிடம் இந்த பதிவின் வாயிலாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நான் பயன்படுத்திய அந்த வார்த்தை நாடகத்தையே குறிப்பதாகும்.

அந்த நாடகமாக மாறியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும்இல்லை என்பதாகவும் அந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்பதாகவும் எழுதப்பட்ட எனக்கான சொற்கள் பிறரை காயப்படுத்தும் போது அதற்காக வருந்துகிறேன். இனி கூடுதல் கவனத்தோடு எழுத முற்படுகிறேன்.

திரு.இளங்கோவனின் மின்னஞ்சலுக்கு முன்னான சம்பாஷனைகள் அதன் பின்னான மனிதர்களை நினைத்துபார்க்கையில் மனம்விட்டு சிரிக்க நேர்ந்தது. நிறையச் சிரித்தேன்.

இந்த மனித வாழ்வில்

முன்னும்

பின்னும்

மாற்றம் மட்டுமே

நிரந்தரமானது!

 பாண்டித்துரை

அலைபேசி: 82377006

மின்னஞ்சல்:pandiidurai@yahoo.com





அநங்கம் இதழில் சில கவிதைகள்

20 09 2009

பாண்டித்துரை கவிதைகள்

 134616

1.

முதலாம் திரிதலுக்கு பின்பு
மறக்க நினைத்தாலும்
இவர்கள் விடுவதாயில்லை
என்ன செய்ய
எழுதிச் செல்வதை தவிர்த்து
2.

கொல்லென சிரிக்கும் கூட்டமும்
அந்த மனிதரும்
இங்குதான் இருக்கிறார்கள்
எங்காவது சந்திக்க நேர்ந்தால்
பிட்டத்தை முகத்தில் காட்டி
சிரித்துவைப்பேன்

 

3.

ஒன்று மட்டும்
புரிகிறது
இன்னொன்று
புரியவில்லை

 134315

4.

இவர்கள்
எழுதுவதற்கு
ஒன்றும் இல்லாத போது
தேவைப்படுகிறது
__மையும்
இன்னபிற மனிதர்களும்

 

5.ஒவ்வொன்றையும்
ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது
ஒருநாள்
சாவதற்கும்

ஓவியம்: உமாபதி

நன்றி : அநங்கம் – மலேசியா (ஆகஸ்ட் 2009)

அநங்கம் இதழ் பற்றிய தொடர்புக்கு : bala_barathi@hotmail.com





சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 4

14 08 2009

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கருத்தரங்கு

(ஜனவரி 2009)

முனைவர் திண்ணப்பன் அவர்களின் முயற்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழை விருப்ப பாடமாக படிக்கும் கல்லூரி மாணவர்களை கவிதை, சிறுகதை என்ற வெளிகளுக்குள் இழுத்துச் சென்று எழுத்தின் பிறப்பினை அறிமுகப்படுத்தியும், அதன்வழி பிறக்கவிருக்கும் வாசிப்பாளன், எழுத்தாளனை அடையாளப்படுத்தும் பணியுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முதன் முறையாக அந்த மாணவர்களுடன் அவர்கள் வாசித்து ஆய்வு செய்த நூல் ஆசிரியர்களை சந்திக்கவைத்து கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய பல்கலை கழகத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த முதல் மேடை அனுபவமாக இந்த நிகழ்வு இருந்திருக்க வேண்டும். ஆனாலும் எந்த பயமும் இல்லை. குழந்தைகளாகத்தான் இருந்தது எல்லோரின் பேச்சும். இவர்களில் ஓராண்டிற்கு பின்னும் எத்தனை பேர் வாசிப்பினை தொடர்கின்றனர் என்பது எப்போதும் என்னுள் எழுகின்ற கேள்விக்குறியாய். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடதக்க ஓரிரு எழுத்தாளர்கள் உருவாகியிருக்கின்றர் என்று சொல்லாதது பெரிய வருத்தத்தை தோற்றுவிக்கப்போவதில்லை.

 எழுத்தாளர்களின் முன் மாணவர்களால் வாசிக்கபட்ட ஆய்வுக்கட்டுரையை உள்வாங்கி பின் அதன் எண்ணங்களை தன் சுயம் பற்றியும் மௌனித்தும் பேசிய எழுத்தாளர்களை காணவாவது அடுத்த ஆண்டு அதீதமான பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் பாண்டித்துரை