வேற்று கிரக ஜீவராசிகள்
வெப்பத்தை கக்கிக்கொண்டிருக்க
இந்த கானகத்தில்
இனி நிசப்தம் இல்லை என்று
நிச்சயிக்கப்பட்டுவிட்டதா?
நிச்சயமற்ற வாழ்வின்
கொடிய முகங்களை
பார்ப்பதை தவிர்த்து
கவலைதோய்ந்த முகம்
கண்களில் தேங்கிய உப்பு நீருடன்
கொஞ்சமாய் பிடி மண் எடுத்து
அணி அணியாய்
பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன
கூடுகளை விட்டு
வெளியேறும் பறவைகள்
கடும் வெப்பத்தால் வெந்தபடி
இறக்கைகள் ஒடிபட்டு
தத்தி தத்தியே செல்கின்றன
தாமதிக்கும் பறவைகளுக்கு
கானகமே மயானமாய்
அவதரித்த வண்ணம்
தொடர்கிறது
எங்கும் மரணத்தின் ஓலங்கள்
சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு
சமுத்திரம்
மௌன சாட்சியாய்
பார்த்து கொண்டிருக்க
கானகத்தின் அமைதிக்காய்
கடும் தவம் செய்யும் புலிகள்
வேடந்தாங்கல் சென்ற பறவைகள்
வெகு சீக்கிரம் திரும்பாது கண்டு
உறுமத் தொடங்க
அதன் சப்தங்கள்
கானகத்தை தாண்டியும்
எதிரொலிக்கிறது.

ஆக்கம்: பாண்டித்துரை

இசிதா


இசிதாவை சந்தித்த பின்தான்
என் இதயம் துடிக்க ஆரம்பித்தது
மனித  மொழிபேசியே
என்னுள் புதைந்துவிட்டவள்
அவளுடைய உலகினுள்
அவ்வவ்போது
விருந்தினராய் என்னையும்
அழைத்துச் செல்வாள்
வியக்கதகு உலகம் அது
எல்லோரும் சமமாய்
அன்பின் முகமாய்
ஆர்பரிக்கும் அலையை ஞாபகபடுத்தி
இழுத்துக் கொண்டு ஓடுகிறாள்
சிங்கத்துடன் சிநேகம்
சாமி மேல் சவாரி என்று
எப்போதும் சப்தத்துடன்
எப்போதாவது மௌனமாய்
கன்னத்தில் கை தாங்கி
காத்திருக்கிறாள்
அவளின் உலகினுள்
அடுத்து யாரையாவது கடத்திச்செல்ல
இசிதா
எனக்கான ஆச்சர்யங்களை
என் உதட்டு புன்னகை தாங்கியுள்ளது
தேவதைகளின் அரசியே
இசிதா
காத்திருக்கிறேன்
உன் புன்னகைக்கு
மீண்டும் உன் உலகினுள்
கடத்திச் செல்ல வருவாயா?

ஆக்கம்: பாண்டித்துரை

அலைபாயுதே

அவள் மட்டும் அந்த அறையில்

தொலைபேசியை எடுப்பதும் வைப்பதுமாய்

கொஞ்சம் காத்திருப்பு

பின் மீண்டும்

தொலைபேசியை எடுப்பதும் வைப்பதுமாய்

கண்களில் கண்ணீர்துளி பூக்கிறது

உலகத்தின் ஒட்டுமொத்த இருண்மையும்

அவளின் அறைக்குள் புகுந்நத வண்ணம்

அவளை ஆரத் தழுவகிறது

கசியும்  நீர் துளியை

கை விரல் தட்டிச்செல்ல

முகம் அலம்பி

கண்ணாடியை ஒருமுறை பார்த்து

ஏதோ ஒன்றை சிந்தித்து

சிறு புன்னகையை சிதறவிட்டபடி

மென்சோகம் படர்கிறது

ஒட்டுமொத்த ஞாபகங்களை

துப்படாவில் கொட்டி

காற்றாடியில் கட்டத் தொடங்குகிறாள்

அந்த ஒரு நிமிடத்தில்

எங்கும் மாயன அமைதி

காற்றாடி அசைகிறது

எங்கும் அதன் சப்தங்கள்

மறு நாளைய பொழுது

தொலைபேசியை அழைத்த வண்ணமாய்

புலர்கிறது 

ஆக்கம்: பாண்டித்துரை