நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது” — நகுலன்
வாசகர் வட்ட நண்பர் ரெ.செல்வத்திற்கு எனது நன்றியை தெரிவிக்க ஆசை. நகுலனின் இறப்புக்கு முன் நகுலன் என்ற எழுத்தாளர் இருக்கிறார் என்பது தெரியும். ஆ.வியின் புண்ணியத்தில் நகுலனின் புகைப்படங்களை கேள்விக்குறியாய் பார்த்தேன். நகுலனின் மறைவிற்கு பின் தான் ஒரு சில கவிதைகளை படித்தேன் அதுவும் தேடி தேடி அல்ல ஏதேச்சையாக நான் கடந்தபோது வழியில் எதிர்பட்டவை. சமீபத்தில் வாசகர் வட்டம் நகுலனின் கவிதை தொகுப்பை (காவ்யா வெளியீடு) எதிர்வரும் செப்டம்பர் 22 அன்று விவாதத்திற்கு எடுத்து கொண்டுள்ளது. இதற்கு காரணம் நண்பர் ரெ.செல்வம். இதன் வழி 100 பக்கங்களை எனக்கு ஸ்கேன் செய்து நண்பர் ரெ.பாண்டியன் மூலம் கிடைக்க பெற்று இரண்டு முறை வாசித்து விட்டாலும் நகுலனை பற்றி எழுதுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. என்னத்தையா எழுதியிருக்கிறார் என்று படிப்பதனூடே நினைத்து சென்றாலும், அப்படி நீ தான் என்னத்த எழுதி கிழிச்சிட்ட என்று எனக்குள் இருக்கும் என்னை நான் கேட்பதும் உண்டு. நகுலனின் கவிதையை படைப்புகளை படித்தவர்களுக்கு நகுலனை பார்க்கத் தூண்டும் நகுலனை படித்தவர்களுக்கு அவரின் படைப்புகளை படிக்கத் தூண்டும். மலேசிய இதழான வல்லினத்தில் வெளியான நகுலனின் ஒரு கட்டுரையை மட்டும் படித்து விட்டு என்னிடம் நகுலன் பற்றிய ஆவலை என் நண்பர் வெளிப்படுத்தினார். ஒரு கட்டுரைக்கே இப்படி என்றால் நகுலனை பற்றி பல கட்டுரைகளை படித்தால்? நகுலனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்? என்னுள் நண்பர் மீதான பயம் தான் அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறையியும் நகுலனை படிக்கும் போதும் என்னை உள்ளே இழுத்துச் சென்ற வண்ணம் இருக்கிறார். ஆனாலும் ஆவல் அவரை மீண்டும் மீண்டும் படிக்க.
யாரது நகுலனா?
காத்திருக்கிறேன்.
பாண்டித்துரை.
புதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது? என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம். தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.
நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது.
மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார்.எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.
சுசீலா நிஜமா? என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது.மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை.வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.
நகுலன் கவிதைகளை வாசித்த நண்பர் ஒருவர் சொன்னது
” இவர் கவிதை என்று வேறு எதற்கு தனியாக எழுதுகிறார் ? “
இக்குரலின் பின்னனியில் அவர் கண்டுகொண்ட ஏதோவொன்று ஒளிந்துள்ளது. இவர் எழுதுவதெல்லாம் கவிதைதானே , அல்லது கதை கவிதை என நகுலனை பிரிக்கமுடியுமா ? கவிதை , கதை இரண்டும் ஒரே உலகின் வேறு தோற்றம்தானா ? இப்படி இப்படியாக பிரிந்து கிளை சென்ற போதும் , நண்பரின் வாசகம் என்னுள் ஏற்படுத்திய சலங்களை முதன்மையாக கொண்டு செயல்பட்ட போது எனக்கும் தோன்றியது , டி.கே.துரைசாமி என்ற நகுலன்
அப்படித்தானா ?
வழக்கம் போல்
எனது அறையில்
நான் என்னுடன் இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
யார் ? என்று கேட்டேன்
நான் தான் சுசிலா
என்றாள்
இக்கவிதையில் வரும் நான் என்னுடன் இருந்தேன் எனும் வரி முக்கியமானது. இதில் நான் | என் | இந்த இருவர் யார் ? ஒருவர் தானா ? இல்லை இருநிலையா ? எதில் கவிஞன் சுருண்டு இருக்கிறார்.” என்னுடன்” என்பதில் தான் எனப்படுகிறது. இதே கவிதையின் கடைசி வரியான “நான் தான் சுசிலா” என்பதில் உள்ள நான்”,நான் என்னுடன் இருந்தேன் வரியில் வரும் நான் , இரண்டும் ஒன்று எனக்கொண்டால் சுசிலா இல்லாமல் போவது தெரிகிறது. இக்கவிதையில் வழக்கம் போல என்ற வார்த்தையை போடுவதின் வழி இதில் உருவாகும் திகைப்பு கலைக்கப்படுகிறது
எஸ்.ராமகிருஷ்ணன்
நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்
நகுலன் என்றால் புரியாத கதைகளையும் புரியாத கவிதைகளையும் எழுதுகிறவர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். மதுரையில் 1980களில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் இக்கருத்தை என்னிடம் கூறி, அப்படி எழுதினால்தான் இலக்கியமாகுமா என்று கேட்டார். இலக்கிய வட்டம் மற்றும் எழுத்து பத்திரிகைகளில் அவர் வித்தியாசமான கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நகுலன் எந்த ஒரு பத்திரிகையிலும் வாசகர்களின் கவனத்தைப் பெற முடிந்ததில்லை. இலக்கிய வட்டத்தில் அவர் கவிதைகளை வெளியிட்டதாகத்தான் நினைவு. ஆனால் உறுதியாகக் கூற முடியவில்லை. தன் வாழ்நாளில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு படைப்பாளியாக நகுலன் இருந்ததில்லை. அதை அவர் அறிவார். ஆனால், அதற்காகக் கவலைப்பட்டதே இல்லை. இந்த நிலைமையைச் சரி செய்ய அவர் சில வழிகளை மேற்கொண்டார். அவை வெறுமனே வாய்பேசாத சில நண்பர்களைக் கொடுத்ததுதான் மிச்சம்.
ஞானக்கூத்தன்
கட்டுரை: தனிமையின் உபாக்கியானம்
நகுலனுக்கு இலக்கியப் படைப்பாக்கம் ஒரு தவம் போல. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போன்று மனம்போன போக்கில் செல்லும் இலக்கியப் படைப்பில் அவர் வாழ்ந்த உண்மை உலகுக்கும் படைப்புலகிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நினைவுப் பாதை அவர் வாழ்ந்ததைப் போன்ற நனவும் கனவும் கலந்த மயக்க உலகத்திற்கு இட்டுச் செல்வது. எனவே, அவர் எழுத்தில் காணப்படும் உண்மைத் தன்மை நம்மை மலைக்கவைக்கும்.
இவர்
ஒரு தட்டில்
அரிசியைத்
தனது சிதறின
சித்தத்தைப் போல்
சிமென்ட் தளத்தில்
இரைக்கிறார்.
என்று ஒரு கவிதையில் எழுதியதைப் போன்றதுதான் இவர் எழுத்து. நனவு, கனவு மயங்கும் இவர் புதின உலகில் நடமாடும் பாத்திரங்கள் – பூனை அணில் உள்பட அனைவரும் உண்மையானவர்கள்; அசல்கள். அதாவது அவர்கள் எல்லாம் நகுபோலிகள் (caricature) அல்ல. ஒருவேளை பிற்காலத்தில் இந்த உத்தியை அதிகமாகக் கையாண்ட நீல. பத்மநாபன் போன்றோர்க்கு இவர் முன்னோடியோ எனத் தோன்றுகிறது.
நகுலனைப் பற்றிப் பேசுவது தம் இலக்கிய மேதமையின் அடையாளம் என்று இன்று தமிழ் இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால், அது நகுலனைப் பொறுத்தவரை எந்த விளைவையும் தரவில்லை. ஏனெனில் அவர் ஒரு கவிதையில் சொல்வது போல,
மிகச் சிறிய
துவாரத்தினூடு
கர்ப்பச் சிறையில்
ஒடுங்கிய
ஒரு யோகி
ஒரு புது நகரைக் காண
தான் தனியாகத்தான் வருவான்
என்பதுபோலத் தனியாக வந்தார். தனியாகப் போய்விட்டார்.
கி. நாச்சிமுத்து
கட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர்
ஒவ்வொருவருக்கும் அவருடைய உலகம் அவரைச் சுற்றியே இருக்கிறது என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால், அதில் எந்த அளவு பிற மனிதர்களுக்கும் இடம் இருக்கிறது என்பது ஒரு முக்கிய அம்சம். நகுலனின் கவிதைகளில் இதர மனிதர்களுக்கு அதிகம் இடம் கிடையாது. இருப்பதும் ஏளனம் தோன்ற இருக்கும். பிறரை இவ்வளவு ஏளனத்துடன் பார்க்கும் ஒருவர் தன் சாதனைகள் என்ன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
அசோகமித்திரன் கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல்
நகுலன் அப்படி ஒன்றும் தமிழ் எழுத்தாளர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் எழுத ஆரம்பித்தது, எழுத்து பத்திரிகையில். எழுத்து பத்திரிகை இல்லையெனில் அவரை நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். எழுத்து இல்லையெனில் வேறொன்று என்று வாதிடலாம். அந்த வேறொன்றும், அது போன்ற எத்தனையோ வேறொன்றுகள், எழுத்து பத்திரிகையின் பாதிப்பில் பிறந்தன தான். எழுத்துவின் பாதிப்பற்ற எந்த பத்திரிகையிலும் அவர் எழுதவில்லை. அவருக்கு அவற்றில் இடமிருக்காது, என்னும்போது, எழுத்துவின் கண்டுபிடிப்பாகத்தான் அவரைக் கொள்ள வேண்டும். என் ஞாபகத்தில் அவரது ‘கொல்லிப் பாவை‘ கவிதை தான் நகுலனை எனக்கு அறிமுகப்படுத்தியது. உரையாடல்கள், நாவல், விமரிசனம் என்று அவர் பலவாறாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், ‘கொல்லிப்பாவை‘ நகுலன் தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக வெளிப்படுப்படுத்திக் கொண்டுள்ளார் என்று எனக்கு இன்றும் தோன்றுகிறது.
கவிதைகள் சிறக்கக் காரணம், அவரது வெளிப்பாடும் மொழியும் மிகச் சிக்கனமானவை. அனேக சமயங்களில் அவர் சொல்லவந்தது முழுதையும் சொன்னதாக இராது. எங்கோ தத்துத் தாவுவது போலவும், சொல்ல மறந்து விட்டது போலவும், தோன்றும். நாவலில், விமர்சனங்களில் ‘மனுஷன் ஏன் இப்படி எழுதுகிறார்? என்று நம்மை நினைக்கத் தோன்றும் விட்டு விட்டுத் தொடரும், தொடர் அறுந்து தாவும் சிந்தனை, கவிதையில் நமக்கு இட்டு நிரப்பிக்கொள்ளும் இடை வெளிகளைத் தரும்
ஒரு நல்ல சம்பாஷணைக்காரரான க.நா.சு. ‘தான் சம்பாஷிக்க விரும்பும் இரண்டு பேர்கள் என மௌனியையும் நகுலனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எத்தகைய பாராட்டு இது
வெங்கட் சாமிநாதன் Thinnai – நகுலனின் நினைவில் :: வெங்கட் சாமிநாதன்
ஓர் எழுத்தாளரைப் பற்றியோ படைப்பைப் பற்றியோ அவர் சொல்லும் அபிப்ராயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைபோல் தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்துவந்தால், அவற்றுக்குப் பின்னே மெல்லிய இழையொன்று நகர்ந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவரது எழுத்துக்களில் போலவே. அவரது பேச்சில் எப்போதும் ஒருவிதமான கிண்டல் தொனி கலந்திருக்கும். ஆனால், அதில் சிறிதும் வக்கிரம் இருக்காது. வெளிப்படையாகப் பேசுவார். நிறையவே படிப்பார். வலிந்து தனது புத்தக அறிவை வெளிப்படுத்தமாட்டார். பேச்சிலும் பழக்கத்திலும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.
அவரது பேச்சைப் போலவே அவரது கட்டுரைகளிலும் கிண்டலும் (இருண்மைத்தன்மையும் தெளிவின்மையும் என்றும் சொல்லலாம்) இருக்கும். தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்குப் பதில் எழுதியபோதும், அவர் வார்த்தைகளைத் தவறவிட்டதில்லை. மனத்துக்குள் வருத்தம் இருந்தபோதிலும் எழுத்தில் நிதானத்தை இழந்ததில்லை. அத்தகைய விமர்சனங்கள் குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட, நானறிந்தவரை, கடுமையான வார்த்தைகளை அவர் உபயோகித்ததில்லை.
‘எழுத்து‘ இதழின் தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதத் தொடங்கியவர், பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவந்தார். ‘எழுத்து‘ காலக் கவிஞர்களுள் அவரது கவிதைகள் வித்தியாசமாக ஒலித்தன. எளிமையான தோற்றம் கொண்ட அக்கவிதைகளுக்குப் பின்னிருக்கும் கவித்துவச் செறிவு வியப்பூட்டக்கூடியது. கவிதையின் வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் பல சோதனைகளைச் செய்து பார்த்தவர். இன்று உரைநடை அமைப்பில் சிலர் கவிதை எழுதுகிறார்கள். இதை ‘எழுத்து‘ காலத்திலேயே செய்தவர் நகுலன். மூன்று கவிதைத் தொகுப்பில் வரும் உரைநடைப் பகுதி இன்று பலர் எழுதிவரும் கவிதைகளைவிடவும் கவித்துவமானது. மரபு சார்ந்த கருத்தாக்கங்களை நவீன வடிவத்தில், புதிய கோணத்தில் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் நகுலன்.
ராஜமார்த்தாண்டன்
அஞ்சலி: நகுலன் (1921-2007) | காலச்சுவடு |: ராஜமார்த்தாண்டன்
எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அக்கதை அவரது வீட்டின் அருகாமையிலிருக்கும் எட்டுவயதுச் சிறுமியைப் பற்றியது. அந்தச் சிறுமி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவள். பெயர் சிமி. அக்குழந்தை ஒரு நாள் நகுலனைத் தேடிவந்து படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்று கேட்டதும் அவர் குஞ்சுண்ணி என்ற மலையாள கவிஞரின் கவிதைதொகுப்பை எடுத்து படிப்பதற்கு கொடுத்தார். குழந்தை வாங்கிப்போய் தன்வீட்டில் வைத்து படித்துவிட்டு வந்து அந்தக்கவிதைகள் தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி அதைத் தானே பாடிக்காட்டியது. நகுலன் அது போல அவளும் எழுதலாம் தானே என்று சொன்னதும், அதற்கென்ன எழுதலாமே என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டது. மறுநாள் அவரைத் தேடி வந்த போது தான் எழுதிய மூன்று கவிதைகளை கொண்டு வந்து கொடுத்து வாசிக்க சொன்னாள் சிமி.அக்கவிதைகள்
சிமி
குமி
உமிக்கரி
* நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்
*மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை.
இந்தக் கவிதைகளில் நஞ்சு என்பது சிமியின் தங்கை பெயர். கொடுவாளை அவர்கள் சாப்பிடும் மீன். மணிக்குட்டன் அவளது தம்பி. தன்னுடைய கவிதைகளை பாடிக்காட்டுவிட்டு குழந்தை தன் வீட்டிற்கு ஒடி மறைந்துவிட்டது. அக்கவிதையை கேட்டபோது தான் அடைந்த அனுபவத்தை மிக உயர்வாக நகுலன் எழுதியிருக்கிறார்.
சிமி எழுதிய கவிதைகளும் நவீனகவிதைக்குரிய அம்சங்களோடு தானிருக்கின்றன.புதுக்கவிதையில் பலரிடமும் காணமுடியாத ஏளனமும் அக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இன்னொன்று கவிதைக்கு ஒரு சந்தம் தேவை என்று குழந்தைக்கும் புரிந்திருக்கிறது. அது தனக்குப் பரிச்சயமான உலகைக் கவிதையாக்கியிருக்கிறது.
குஞ்சுண்ணி கவிதைகள் இப்படிதானிருக்கும்
எனக்கொரு பீடி தாருங்கள்
எனக்கொரு தீக்குச்சி தாருங்கள்
அப்படியே
எனக்கொரு உதடு தாருங்கள்
இரண்டு பேரின் கவிதைகளையும் சேர்த்து வாசிக்கும் போது குழந்தையின் கவித்துவம் புரியத்துவங்குகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை: நகுலன்
Ôநீங்கதான் ராமகிருஷ்ணனா?’Õ
‘Ôஆமாம்!’Õ என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன். நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா?’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது?Õ என்று வியப்போடு பார்த்தேன்.
அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’Õ என்றார். இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்?Õ என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!
அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும்
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளா?Õ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார். அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும்? சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்!
எஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை-
எஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை: நகுலன்
நகுலனைப் படித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆர்வமிருப்பின் இந்தத் ‘தனி மொழி’ என்னும் கருத்தாக்கம் சென்ற, செல்லும் திசைகள் குறித்துப் படித்துப்பார்க்க முயல்வதும் நலம்.
நேரடியாக எதுவும் நகுலன் குறித்து எனக்குத் தெரிந்திராவிட்டாலும், “ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பத்துத் தரம் திருத்தி எழுது” என்ற ரீதியில் இந்த நாவலின் பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருக்குமென்று தோன்றவில்லை – எழுதப்பட்ட பக்கங்களை எந்த வரிசையிலும் மாற்றி அடுக்கிப் படித்துக்கொள்ளமுடிவது இலக்கியத்தை ஸ்பார்க்நோட்ஸ் மூலம் படிப்பதுபோலில்லையா என்று கேட்டுக்கொள்ளத் தோன்றினாலும், பாரதியைப்பற்றி “அவன் என்ன எழுதினாலும் அதற்குள் மரபு வந்து விழுகிறது” என்று நகுலன் கூறுவதைத்தான் என்னளவிலும் நகுலனைக்குறித்துச் சொல்லத் தோன்றுகிறது.
கரிசல் » நகுலன் நாவல்கள் சன்னாசி
பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம் போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.
“நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது”
தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான்
தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை