உயிரோசை.காம் (100-வது இதழ்) – சில கவிதைகள்

1.
 
வெளிச் செல்லும் விருந்தினரைப்
பின்தொடர்ந்து செல்ல
இளா அடம்பிடிக்கிறாள்
அழத்தொடங்குகிறாள்
டாக்டர்கிட்ட ஊசிகுத்தப் போறாங்க
என சொல்வதற்கு முன்
 
2.
யானை சவாரி செல்ல
இளா கூப்பிட்டாள்
பழக்கப்பட்ட யானையைப்போல்
மண்டியிட்டு அவளை ஏற்றிக்கொண்டேன்
யானைத் தலையைப் பிடித்த இளா
இடமும் வலமும் ஆட்டத் தொடங்கினாள்
யானை நகரத் தொடங்கியது
 
3.
அம்மாவுடனான தொலையாடலுக்குப் பின்
யாரு பேசறாங்க எனக் கேட்கும் முன்
சிவமயம்
உலகெங்கும் பரவியதுபோல்
பாரிவள்ளல் பள்ளியின்
கல்விப்புகழ் உலகெங்கும் பரவட்டும்
நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்
மாறுவேடப் போட்டியில்
சிவன் வேடம்போட்ட ஜெகஜோதி

4.
வரைந்தவனின் மௌனத்தை
வார்த்தையாக்கும் போது
காலம் உனதாகிறது
                                       (அறிவுநிதிக்கு)

நன்றி: உயிரோசை.காம் (100-வது இதழ்)

உயிரோசை சில கவிதைகள்

 

நாதஸ்வர சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும் 

——————————————————————–
ஒரு வேப்பமரமும்
வெள்ளம் சிதைத்த வீடொற்றின்
நவீன பக்கத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
வேப்பமரம் வெட்டப்பட்ட கனத்தையும்
வெள்ளம்  சிதைத்த சுவற்றின்
மிச்ச செங்கற்களை உருவிய பொழுதையும்
நினைக்காது இருக்கும் வரை

 நன்றி:உயிரோசை.காம்

2008 திரும்பிப் பார்க்கிறேன்

happy2008

அட! அதற்குள் 2008 கடந்துவிட்டதா, என்பதை தவிர திரும்பிப்பார்த்தால் எல்லாம் மகிழ்வான தருணங்களாகத்தான் இருந்திருக்கிறது.

 

2008-ன் துவக்கத்தில் நாம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் ஆரம்பித்தது, பிரம்மா என்னும் கவிதை தொகுப்பினை (எனது முதல் கவிதை தொகுப்பு) நான்கு நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டது, அம்ருதா, யுகமாயினி, வடக்குவாசல், உயிரெழுத்து, அநங்கம், உயிரோசை (இணையம்) இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்தது, முதல் தொலைக்காட்சி படைப்பு (சிங்கப்பூர் வசந்தம்), சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை (PR) பெற்றதுடன் அடுத்த ஆண்டு என் ஊரில் எழுந்து நிற்கப்போகும் குடியிருப்புக்கு அடித்தளம் போட்டது வரை எல்லாம் மகிழ்வான தருணங்களே.

 

என்ன பாண்டி, அப்ப துன்பங்களே இல்லையா? என்றால்

 

இருக்கிறது!

 

ஆகக்கொடிய வலியினை மார்ச்-08  மத்தியில் அரவணைத்துக்கொண்டேன். இதன் வீச்சு இதயத்தில் துளையாய் இன்னும் இருக்கிறது. 2009-தினை இன்முகமாக வரவேற்க எல்லோரும் எழும் தருணத்திலும் என்னுள்ளேயான துன்பத்தின் சாயலை வெளிக்கொணர விரும்பவில்லை.

 

எப்பவும் அழாதடா, சிரிச்ச முகமாக இரு. இல்லை இல்லைனு சொல்லாத, எல்லாம் உன்னிடம் இருக்கிறது. வரும்! எல்லாம் ஒவ்வொன்றாய். உன்னைச் சுற்றிலும் மெழுகின் ஜோதியைத்தான் நீ நிரப்ப வேண்டும் என்று சொன்ன தோழி நினைவுக்கு வருகிறாள் இவானோடு! .

 

அதற்கான முயற்சியாய் 2008ன் துன்பங்களோடு

 

இனி

எனக்கான வலியினை

யாரிடமும் சொல்லப்போவதில்லை

ஏன்

என்னிடம் கூட!

 

2009 ன் துவக்கத்தில் எதற்காக காத்திருக்க போகிறாய் என்றால்

 

ஒரு கவிதைக்காக!!!

 

2008 ன் துவக்கத்திற்கான முதல் நாளிரவு அழகான ஒரு கவிதையை மனம் சுமந்துநின்றது, அந்த கவிதையை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

 

 

கவிதைக்கான காத்திருத்தலோடு

பாண்டித்துரை

 

@pandiidurai@yahoo.com