சாப்பிட வாருங்கள்: “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” 12.02.2012 – ஜீராங் ஈஸ்ட் நூலகத்தில்

 

 

.

புதிதாய் இரண்டு முகங்கள்

29.08.2010 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 20வெள்ளி கட்டணத்தில் திரு.பிரபஞ்சன் பயிற்றுவித்த அரைநாள் (இந்த அரை சரியா) (இல்லை இந்த அறை சரியா) (அறையில் நடந்ததால் உங்களின் வசதிக்கான 1/2  போட்டுக்கொள்ளுங்கள்) சிறுகதை பயிலரங்களில் கலந்துகொண்டேன். சிறுகதை பயிற்சிக்கு  புதிதாக இரண்டு இரண்டு முகங்களோடு, இரண்டு இரண்டு எழுத்தாளர்கள், இரண்டு இரண்டு வாசகர்கள், இரண்டு இரண்டு மாணவர்கள், இரண்டு இரண்டு ஆசிரியைகள், இரண்டு இரண்டு கவிஞர்கள், இரண்டு இரண்டு மனிதர்கள் என இரண்டு இரண்டாய் வந்திருந்தனர்.
 
என்னை நானே பார்த்துக்கொண்டேன்.  ஒரு முகம் அறைக்குள் நுழைந்ததும் கர்மசிரத்தையாக கவனிப்பது போன்ற தோற்றத்துடன் பிரபஞ்ச அசைவுகளை உற்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்னொரு முகம் கொஞ்சம் காபி கொடுத்தால் தேவலாம் போல இருக்கு atleast ஒரு வாட்டர் பாட்டில்… ம்கூம் அடுத்த முறை வரும்போது பிடித்துக்கொண்டே வந்துவிடவேண்டும் என்று உறங்கி உறங்கி எழுந்துகொண்டிருந்து. இல்லை எழுதிக்கொண்டிருந்தது
 
ச்சேய் ஒரு அருமையான நிகழ்வினை தவறவிட்டுவிட்டோமே 20 வெள்ளி கட்டி உறங்கிக்கொண்டிருக்கிறோமே நேற்று ஒரு 2 வெள்ளி செலவு செய்திருந்தால் உறங்காமல் இருந்திருப்பேனே…
 
ஒரு நல்ல எழுத்திற்கு, அது என்ன நல்ல எழுத்து? நியாமான எழுத்திற்கு, அது என்ன நியாயம்? என்றெல்லாம் பேசினார்கள் என்று, சிறுகதை பட்டறை ஆரம்பத்திற்கு முன்னும்,  முடித்தபின்னும் பேசிக்கொண்டிருந்தனர்.  நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
நூலக அதிகாரி மணியம் அவர்கள் நிழ்வின் உச்ச பட்ச கருத்துக்களை பிரியமானவர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார் அருகே விவரமில்லாதவனாய் நின்றுகொண்டிருந்தேன்.
இன்னும் சிலர் அவர் இருந்தும் கிடைச்சிருக்கே, இவர் இருந்தும் கிடைச்சிருக்கே என்று பேசிக்கொண்டனர். அவர் முகத்தையும் பார்த்தேன் இவர் முகத்தையும் பார்த்தேன். இரண்டு முகங்கள் ஒன்று அவருடையது இன்னொன்று இவருடையது.
 
3 நாள் நடந்தால் தான் ஓரளவிற்கு திருப்திகரமான ஸ்பரிசங்களை பெறமுடியும் என்று 1/2 நாளில் 6 கதைகளைச் சொல்லி கள்ளக்காதல் மாணவனை அவனுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியையை அந்த ஆசிரியையை அறிந்திராத என்னை கவர்ந்துசென்ற பிரபஞ்சன், பட்டறை முடிவில் கையெழுத்து போட்ட காகிதத்தை பத்திரமாய் மடித்து எங்கே வைப்பது என்று நினைக்காமல் எல்லாரும் பந்திக்கு சென்றுகொண்டிருந்தனர்
 
சாப்பிட்டுகொண்டிருந்த போது இந்திரஜித் வந்துகொண்டிருக்கிறார் என்று நண்பர் மணிவேல் சொல்ல எனக்குள் ஆர்வம், ச்சேய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிகூட வாழ்த்து சொல்லவில்லை, நேரில் பார்க்கப்போகிறோம் கை குலுக்கி வாழ்த்திவிடுவோம் என்று நண்பருக்கு அடுத்தடுத்த வந்த இரண்டு அழைப்புகளிலும் அண்ணன் வர காத்திருக்கதொடங்கினேன்.
 
இந்திரஜித் அண்ணன் புதிதாய் ஏதேனும் முகத்தோடு வரலாம் வரக்கூடும் வந்தால் எப்படி அவரை அடையாளம் கண்டுகொள்வது என்று யோசிக்கத்தொடங்கினேன். குழப்பங்களுக்கு எல்லாம் அண்ணன் எப்போதும் இடம் கொடுக்காதவர் அதே முகத்தோடு வந்திருந்தார், அந்த புன்னகை அதுதான் அதேதான் அண்ணனே தான் மீண்டும் குழப்பம் எல்லா நிகழ்வுகளிலும் பெரும்பாலும் இந்த பாண்டித்துரை தென்படுவானே? நேற்று கல்பா அடிக்க எங்கே போயிருப்பான் என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்பே சிரித்துவைத்தேன் யோசிக்கவில்லை என்றாலும் சிரித்துவைப்பேன் நான் அப்படித்தான் சிரிப்பதற்கெல்லாம் யோசிப்பதில்லை.
 
அந்த நிகழ்வு அப்படித்தான்யா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த நிகழ்விற்கு செல்லாதது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.
உயிரோசையில் இந்திரஜித் அண்ணனின் கட்டுரையைத்தான் முதலில் கிளிக் செய்வது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று வாரங்கள் வாராதபோது நண்பர் ஷாநவாஸிடம் அண்ணன் கட்டுரையை காணோமே என்று கேட்பேன், ஆமாம் பாண்டி என்று சொல்வார் ம் என்பேன் வருத்தம் இழையோடியிருப்பதை அவர்கண்டுகொள்ளமாட்டார், நானும் காட்டிக்கொள்ளமாட்டேன்.
 

ஒரு நாடற்ற இனத்தின் பேரவலம் (ஈழம்)

இந்தக் கொடுங்கனவு தமிழர்களின் நினைவுகளில், அந்த நினைவுகளால் எழுதப்படப்போகும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்டது. உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் வரலாற்றில் இதற்கு நிகரான ஒரு கொடுங்கனவு எப்போதும் நிகழ்ந்த்தில்லை. பிரபாகரனின் உடல் என்று காட்டப்பட்ட ஒரு பிம்பம் தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதை சிதைத்ததுபோல இன்னொரு பிம்பம் சிதைத்ததில்லை. ஈழப்போரட்டத்தின் துயரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் இடையறாது கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அந்தப் போராட்டம் இன்று அழித்தொழிக்கப்பட்டிருக்கும் காட்சி ஏற்படுத்தும் வெறுமையும் கசப்பும் கடந்துசெல்லக் கூடியதல்ல. விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் இன்று தோற்கடிக்கப்பட்ட குரூரமாக சிதைக்கப்பட்ட தமிழ் அடையாளத்தின் வடிவமாக மாறியிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு லட்சம் தமிழர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறார்கள். இந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் என்ற மொழிப்பிரதேசத்தில், நாடற்றவனாக, நிலமற்றவனாக, மிகக் குரூரமாக தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் இவ்வாறுதான் உணர்ந்திருக்கக் கூடும். தமிழ் அடையாள உணர்வுக்கு வெளியே, அன்னியர்கள் இந்த்த் துயரத்தை புரிந்து கொள்வது கடினமானது. அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றி பேசுவதன் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்திவிடக் கூடும். ஆனால் இந்தக் காயம் இந்த வீழ்ச்சியி புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட ஒரு இனக் குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது.

 

சிங்கள மக்கள் இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முரசங்களை அதிரச் செய்தபடி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின்மீது கொள்ளப்டபட்ட வெற்றியின் நடனம். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதற்கான உலக நாடுகள் இலங்கை அரசுக்கு வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடந்த இந்த பச்சை ரத்த இனப் படுகொலையை ‘அத்து மீறல்கள்’ என மென்மையான குரலில் சில மனிதாபிமான சக்திகள் கண்டித்து வருகின்றன. சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் தளபதிகளையும் கொன்று தீர்த்த ராஜபக்சேவின் அரசு ஒரு மறுப்பு அறிக்கையின் மூலம் தனது கொடூரமான போர்க் குற்றங்களை மறைத்துவிட்டது. ராஜபக்சேவின் ராணுவத்தின் போராட்டத்தையும் பிறகு பிணங்களையும் காட்டி கொடுத்தவர்கள் இனி பொம்மை அரசுகளுக்கு தலைமை தாங்கி நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவார்கள். தமிழர்களுக்கு எதிரான இந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவும் சீனாவும் தங்களது எதிர்கால யுத்த தந்நிரங்களுக்காக இந்தச் சின்னஞ்சிறுதீவை மேலாதிக்கம் செலுத்த தொடர்ந்து போட்டியிடும்.

 

தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இவ்வளவு குரூரமான இனப்படுகொலைக்கு எதிராக தலையிட சர்வதேச அரங்கில் எந்த நாடும் முன்வரவில்லை. மன்னிக்கமுடியாத போர்க்குற்றங்களை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தை உறுதியுடன் கண்டிக்க ஜ.நா உட்பட எந்த சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. நவீன உலக வரலாற்றில் இந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஒரு மனித்த துயரம் இனப்படுகொலை வேறு எதுவும் இல்லை. தமிழர்கள் ஆங்காங்கே தெருமுனைகளில் ஆர்ப்பாட்டம் செய்து தடியடி வாங்கிக் கொண்டு கலைந்துபோகிறார்கள். கவிதைகள் எழுகிறார்கள். கபட அரசியல்வாதிகளின் கையில் தங்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கையளிக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய அழிவிற்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்களால் செய்யக் கூடியது எல்லாம் அது மட்டுமே.

 

இலட்சக்கணக்கான மக்கள் இலங்கை அரசின் தடுப்பு முகமாம்களில் பசியிலும் பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் ஏதும் இல்லை. தனது இனப்படுகொலையின் சாட்சியங்களை மறைப்பதில் மும்மரமாக இருக்கும் இலங்கை அரசு சர்வதேச உதவி நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து வருகிறது.

 

தனக்கென ஒரு நாடில்லாத ஒரு அரசு இல்லாத ஒரு இனத்தின் குரூரமான வீழ்ச்சி. இது என்றென்றும் நமது நினைவுகளில் நமக்கு பிந்தைய தலைமுறைகளின் நினைவுகளில் நிலைத்து நிற்கும். நாடற்றவனின் துயரம், கொலைக் களத்தில் தமக்காக பேசுபவர்கள் யாருமற்றவர்களின் துயரம் வரலாற்றின் அவர்கள் உயிர்த்தெழுவதற்கான வலிமையைக் கொடுத்திருக்கிறது. தமிழினமும் என்றேனும் ஒரு நாள் தனது தோல்வியிலிருந்தும் அழிவிலிருந்தும் உயிர்த்தெழும்.

 

இப்போது தமிகர்கள் எந்த நாட்டில் எந்த அரசின் கீழ் வாழ்ந்தாலும் அவர்கள் நாடற்றவர்கள், அகதிகள், தோற்கடிக்கப்பட்டவர்கள்.

 

 

மனுஸ்ய புத்திரன்

ஜீன் 2009 உயிர்மை இதழில் இருந்து.

 

நன்றி: மனுஸ்ய புத்திரன், உயிர்மை