மீண்டுவரும் இந்தக் கவிதைகள்
தேர்தல் ஜீரத்தில் பணம்+புட்டி+விசேட ப்ரியாணி = பொட்டி
தமிழக முத்திரைகள் தலைநகர் தலைமையை மாற்றுவதாக அமையட்டும்
————————————————–
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
எல்லாம் மாறும்மட்டும்
எதிர்த்து நிற்கட்டும்
தேசம் விட்டு தேசம் போய்
பிச்சையெடுக்கட்டும்
பிணைகைதியாய் வாழட்டும்
காட்டி கொடுக்கட்டும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
அடிபட்டு வீழும்
அநாமத்தின் புகைப்படகோப்புகள்
வாரம் ஒரு
வன்புணர்ச்சி வீடியோ பதிவுகள்
இல்லாதுபோயின்
சன் டிவியும் கலைஞர் டிவியும்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
செல்லடி சப்த்தத்தை செய்தியாய் படிப்போம்
பின் அதனை மடித்துவைப்போம்
நன்றாக சாப்பிடுவோம்
இரவின் கனவோடு இன்புற்று
தூங்கி எழுவோம்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
வில்லு படம் பற்றி பேசுவோம்
விசயகாந்த் அரசியல் பற்றி பேசுவோம்
இன்னார் கூட இன்னார் ஓடிப்போனது உட்பட
நாம் பேச நிறைய இருக்க
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
நமக்கென வீடு இருக்கிறது
காய்ச்சல் வந்தால்
அம்மா
அப்பப்பா
தொலைபேசி அழைப்புகள்
நமக்கு என்ன வந்துவிட்டது
நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்
———————————————————————————————
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்
வண்புணர்சிக்கு உட்படுத்தி
கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து
கொத்து கொத்தாய் வீழும் குண்டால்
குறையும் மனிதத்தை எதிர்த்து
சகோதர நாடு தரும்
சாக்கடை முகாம் கடந்து
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்
தொல்லை தரும் வெள்ளை வேன்
வெள்ளை உடை தரித்த மனிதர்கள்
தொடரும் சோதனைச் சாவடி
இல்லா தேசம் வேண்டி
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்
உண்ணா நோன்பிருந்து
தினம் ஒருவராய்த் தீக்குளித்து
போராளி உடை தரித்து
மூப்பைக் கண்டடைந்த பின்
சாவதற்கு அவர்கள்
தயாராகவே இருக்கிறார்கள்
——————————————————————————————————————
நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
திருமணத்திற்கு பின்னான நாட்கள்
பியர் சாப்பிட்ட முதல் நாள்
நாய்க்குட்டிக்கு கொடுத்த முத்தங்கள்
குழந்தைக்கான கவிதை
அலுவலகக் கடிதம்
அம்மாவுடன் தொலையாடியது
லதாவுக்கான புன்னகை
கென் நித்யா ஞாபகம்
முதல் சிறுகதை
சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
குட்டப்பன் மீதான கோபம்
ஈழவிடுதலையின் முடிவு
கடைசி மரணம்
நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
——————————————————————————————————————–
கனவு காணுங்கள்
கனவு காணுங்கள்
அப்துல்கலாம்
சொல்லிக்கொண்டே இருப்பார்
ஆழமான கனவு
கொஞ்சம்
நீளமான கனவு
ஆமாம்
என் கனவை
நாளை பிறக்கும்
குழந்தையும்
சுமக்கப் போகிறது(தா)
நரை விழுந்த
கிழத்தின் துடிப்புகூட
நம்மில் பாதியாய்
ஞாபகபடுத்திக் கொள்கிறேன்
ஒவ்வொரு செல்லடியின்
சப்தத்திற்கு பின்பு
நாளை நனவாகும் என்று
விதைக்கப்பட்ட ஆன்மா(க்கள்)
உலவிக்கொண்டிருக்கிறது
அந்த நம்பிக்கை
விடியும் ஒரு நாள்
ஈழத்தில்
—————————————————
புதிதாய் முளைப்பதற்கான சாத்தியங்களில்
செல்லடிக்கப்பட்டு
மரங்கள் வெட்டப்படுகின்றன
தொடரும் பருவ நிலை மாற்றத்தால்
மழைவரத்தும் குறைகிறது
உயிர்த்துளி பருக
வான்பரப்பிலோ
உருகும் உலோக மழைத்துளி
வெம்மைநோய் தாக்கத்தால்
நிலப்பரப்பின் கரும்பயிர்கள்
ஆழ்கடல் பரப்பின் நிசப்தத்தோடு
அதிகரிக்கும்
மௌனங்களுக்கான இடைவெளியில்
கிழக்கு சிவக்கத்தொடங்கலாம்
திறக்கப்படாத கடவுளின் கண்களை
இடைவிடாது சப்தமிடத்துடிக்கும்
இரவின் பூனைகளின் காத்திருத்தலோடு
கைத்தடிக் கிழவனின் நிலத்தடி நீருக்காக
காத்திருக்கும்
தமிழ்க்கடவுளின்
ஆயுள் நீட்டிக்கப்படவேண்டும்
என்பது பற்றிய சிந்தனையாவது
உணவிற்காய் உதடுகள் திறக்கும்பொழுது
வந்து செல்லட்டும்.
———————————————————————————————————————–
வேற்று கிரக ஜீவராசிகள்
வெப்பத்தை கக்கிக்கொண்டிருக்க
இந்த கானகத்தில்
இனி நிசப்தம் இல்லை என்று
நிச்சயிக்கப்பட்டுவிட்டதா?
நிச்சயமற்ற வாழ்வின்
கொடிய முகங்களை
பார்ப்பதை தவிர்த்து
கவலைதோய்ந்த முகம்
கண்களில் தேங்கிய உப்பு நீருடன்
கொஞ்சமாய் பிடி மண் எடுத்து
அணி அணியாய்
பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன
கூடுகளை விட்டு
வெளியேறும் பறவைகள்
கடும் வெப்பத்தால் வெந்தபடி
இறக்கைகள் ஒடிபட்டு
தத்தி தத்தியே செல்கின்றன
தாமதிக்கும் பறவைகளுக்கு
கானகமே மயானமாய்
அவதரித்த வண்ணம்
தொடர்கிறது
எங்கும் மரணத்தின் ஓலங்கள்
சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு
சமுத்திரம்
மௌன சாட்சியாய்
பார்த்து கொண்டிருக்க
கானகத்தின் அமைதிக்காய்
கடும் தவம் செய்யும் புலிகள்
வேடந்தாங்கல் சென்ற பறவைகள்
வெகு சீக்கிரம் திரும்பாது கண்டு
உறுமத் தொடங்க
அதன் சப்தங்கள்
கானகத்தை தாண்டியும்
எதிரொலிக்கிறது.
—————————————————-
©pandiidurai@yahoo.com