காஞ்சனாவை முதன் முதலாகச் சென்னை டைட்டல் பார்க்கில்தான் சந்திச்சேன். டேட்டா என்ரி வேலைக்குப் பத்து நாள் பயிற்சிக்காக நானும் சரவணனும் சென்றிருந்தோம்.
ஐசிஐசிஐ–யின் எட்டாவது மாடியில் இருந்தது. அந்த அலுவலகப் பிரிவு. அந்தப் பத்துநாளும் எங்களுக்கு வகுப்பெடுத்தது காஞ்சனாதான்.
பார்த்த அன்றே காஞ்சனாவை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. மற்ற பெண்களை விட காஞ்சனாவிடம் ஏதோ ஒன்று அதிகமாக ஈர்ப்பதாக உணரமுடிந்தது.
காஞ்சனா பேசுவதைக் கேட்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவளின் பேருக்கு அர்த்தம் சொல்வது மாதிரி அந்த அழகான கண்களை எனை மறந்து பார்த்துக்கொண்டே இருந்த தருணங்கள் நிறைய உண்டு.
ஆனால் ஏனோ ஓர் சோகம் இழையோடிய வண்ணம் அம்முகம் சாந்தமாக இருந்தது. சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியையும் மீறி அந்த சோகம் வெளிப்படுவதாகத் தோன்றியது எனக்கு .
அந்த சோகம் தான் என்னை அதிகமாக ஈர்ப்பதோ என நான் எண்ணியதுண்டு. ஆனாலும் அந்த சோகம் இல்லைன்னா அம்முகம் காலை நேரத்து வாகன நெரிசல் போலதான் இருக்கும். என நினைத்துக் கொண்டேன் .
இங்கு இருக்கும் என் நண்பர்களுக்கும் காஞ்சனாமேல ஈர்ப்பு இருந்திருக்கலாம்.
அது எந்தமாதிரியான ஈர்ப்புனு என்னால கற்பனைகூடப் பண்ணிப்பார்க்க முடியலை.
வந்த மூன்றாம் நாளிலே என்பெயர் சொல்லிக் கூப்பிட்டு சாப்பிட போகும் போது மறக்காமல் உடன் அழைத்து செல்லும் அளவுக்கு நண்பர்கள் செந்தில், வைத்தி, சார்லி, கீதா, தேவகினு…
பாடவேளைகளில என்னோட கவனமெல்லாம் பாடத்திலிருக்காது. காஞ்சனாமேலயே தான் இருக்கும். அடிக்கடி நண்பர்களைப் பார்த்துக்குவேன் அவர்களின் கவனம் என்மேல இருக்கான்னு.
அவளின் ஏதோ ஒன்று என்னை ஆத்மார்த்தப் பாதைக்கே இழுத்துபோவது போன்ற ஒரு உணர்வு.
“என்ன நீதி, பாடம் கஷ்டமாக எதுவும் இருக்கா“ ,என்றாள் காஞ்சனா.
“இல்லையே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே“
என்றேன் நான்.
என்னோட பிரச்சனையே நீதான்னு , உள் மனசு சொல்லும்.
காஞ்சனா பாடம் நடத்தும்போது, அவளின் கண்களோட சேர்ந்து, கையும் பேசும் . கை போற பக்கமெல்லாம் என் கண்ணும் பயணப்படும். அவளை என்னளவுக்கு யார் புரிஞ்சிருப்பாங்கனு தெரியலை.
ஏன்னா, நண்பர்களுடன் நல்லா ஜாலியா பேசினாலும் யாரும் வெளிப்படையா பேசலை. வேற வேற நிறுவனத்தில் இருந்து பயிற்சிக்கு வந்ததாகக் கூட இருக்கலாம்.
எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் அரட்டை தான், நம்ம சும்மா இருந்தாலும் கீதா விடமாட்டா,
என்ன செந்தில் ஏதாவது பேசுப்பா. நேத்து மத்தியானம் மாதிரி இன்னைக்கு உங்கிட்ட லஞ்ச் கேட்டுட மாட்டேன்.அதுக்கு ‘வைத்தி‘ இருக்கான்னு ஒரு சிட்டாய் சிறகடிப்பாள்.கீதா.
வைத்தி ரொம்ப சுவாரஸ்யமானவன். 35 வயதிருக்கும். இன்னும் திருமணம் ஆகலை. சென்னையிலே பொறந்து வளர்ந்து இருந்தாலும் அவனப் பொருத்தவரைக்கும் சென்னைனா ஆதம்பாக்கம் மட்டும் தான். அந்த அளவுதான் அவனோட உலகம் வியாபித்திருந்தது.
திருநெல்வேலியில் இருந்து வந்த சார்லி சென்னையைப் பத்தி பேசும் போது, இப்படியெல்லமா சென்னையில நடக்குதுனு ரொம்ப ஆர்வமாகக் கேட்பான்.
வைத்தியோட உண்மையான பேரு சிவா. நான் தான் என் கல்லூரி நண்பன் மாதிரியிருப்பதால் வைத்தினு கூப்பிட ஆரம்பித்தேன். அதன்பின் எல்லோருமே அவன வைத்தினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அதுல இருந்து நான் கூப்பிடும் போது எல்லாம்,அவன் கடுப்பாயிடுவான் அதுக்காகவே கூப்பிடுவேன்.
பாடம் நடத்தும் போது ஏதாவது போட்டி வைப்பது காஞ்சனாவின் வழக்கம்.
அன்றும் அந்த மாதிரிதான் உங்களுக்கு பிடித்த படம், பிடித்த நடிகர், நடிகை பேரை எழுதித்தாங்க அப்படினு சொல்ல,
எல்லோருமே உடனே எழுதிக் கொடுத்துவிட, நான் மட்டும் கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுத்துக்கிட்டேன்.
வைத்தி எட்டி எட்டி என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டதால என்னோட பேப்பரை, காஞ்சனா, அதிக ஆர்வமாகப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
படித்து முடித்ததும் அதட்டும் தொனியில் நாக்கின் நுனியை மடித்துச் சிரிக்க
கண்ணாலயே, உங்களுக்கு யாரைப் பிடிக்கும்னு நான் கேட்டேன்.
கண்டிப்பா சொல்லனுமா? அப்படினு ஒரு பார்வை பார்த்தா பாருங்க, இன்னைக்கும் என் நினைவிலேயே இருக்கு.
இப்ப எல்லாம் பெண்களை வாயடினு சொல்லமுடியாது. வேணும்னா கண்ணாடினு சொல்லலாம், என என் மனம் கவி பாடியது.
அப்படி என்னதான் எழுதியிருந்தேன்னா , நான் பெங்களூரில் இருந்து அப்பதான் சென்னை வந்திருப்பதால், அங்கே எனக்கு கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்கள் பார்க்கும் வாய்ப்பு இருந்ததால் எல்லா மொழியிலும் ஒருத்தரை குறிப்பிட்டிருந்தேன் அவ்வளவுதான்.
தேவகி ஈழத்துபெண் 4 வயதில் சென்னைக்கு வந்தவள். என்னிடம் நல்லாப் பேசுவாள். ப்ராஜக்டில் ஏதாவது பிரச்சினைனா நான் தான் உதவி செய்வேன்.
அவள் எப்பவும் என்னிடம் இருந்து ஏதோ எதிர்பார்பது போல உணர்வேன் .
ஆனா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைன்னு கண்ணாலயே மறுதலிப்பாள்.
ஒரு நாள் இதுவரை நடத்தினதில் நினைவில் உள்ளதை எழுதுங்க, என காஞ்சனா சொல்ல,
நான் வழக்கம்போல சிரிச்சிகிட்டே எழுத ஆரம்பிச்சேன்.
தேவகி ஆர்வமாக என்னடா எழுதுன? கொடு பார்க்கலாம்னா, கொடுத்தேன்.
படித்தததை எழுதுவதற்கு பதிலா நான் பாடம் நடத்திய காஞ்சானாவையே கவிதையாக எழுதியிருந்தேன்.
படித்து விட்டு நல்லாயிருக்குடா எப்ப குடுக்கபோறன்னு கேட்டாள்.
ஒரு பெண்ணைப்பத்தி நான் எழுதியதை மற்றொரு பெண்ணே இரசிக்கவும், கடைசி நாளில் குடுக்கலாம் என்றிருக்கிறேன் என்றேன்.
ம் ,அப்படியே செய். ஆனா நல்ல கார்டா வாங்கி அதில் வைச்சுக்கொடு என்றாள்.
கடைசி நாளும் வந்தது. கொடுப்பமா வேண்டாமா என யோசனைகள் மனதில் நிறைய எழுந்தன.
காரணம், சுப்ரமணியம் சார் காஞ்சனாகிட்ட ரொம்ப நேரமாகப் பேசிக்கிட்டே இருந்தார்.
தேவகி என்னையேப் பார்த்துச் சிரிச்சிக்கிட்டு இருந்தாள்.
பதட்டம் எல்லாம் எதுவும் கிடையாது, சரியான தருணத்தில் காஞ்சனாவிடம் குடுத்தேன்
என்னடான்னு வாங்கிப் பதட்டமே இல்லாமப் படிச்சாங்க, சிரிச்சுகிட்டே சுப்ரமணி சாருக்கிட்ட பாருங்கன்னு கொடுத்தாங்க.
அவர், படிச்சிட்டு நல்லா எழுதியிருக்க நீதினு ஆச்சர்யமாகப் பார்த்தார்.
அன்று கடைசி நாள் என்பதால் எங்கள் ப்ராஜக்டை நாங்கள் வெற்றிகரமாகச் செய்தமையால் கீழ்தளத்திற்கு அழைத்துவந்து காஞ்சனா எல்லோருக்கும் ஐசுக்கிரீம் வாங்கி தந்தாங்க.
நானும் சுப்பிரமணியம் சார் மட்டும் இரண்டு எடுத்துக்கொண்டோம்.
என் பார்வையெல்லாம் காஞ்சனாமேலேயே இருந்தது.
எல்லோரிடமும் ஒருவித ஆர்வம், இந்த இடத்தை விட்டுப் பிரிவதைப் பற்றி, காஞ்சனா , சுப்பிரமணியம் சார் இனி வர இருக்கும் புதிய பணிச்சூழல் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
பிரியும் கடைசி நொடி வரை நான் காஞ்சனாவையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
உயிரின் பெரும்பகுதி என்னைவிட்டுப் பிரிவதாய் ஒரு மனப் போராட்டம் என்னுள். ஏன் இந்த மாதிரினும் அப்போது புரியலை.
எல்லாம் முடிந்து பேருந்தில் வரும் பொழுது எப்போதையும் விட கனத்த மௌனம் கண்ணீருக்கு வழிமொழிந்தது.
பத்து தினங்கள் சென்றிருக்கும் எதிர்ப் படும் பெண்களெல்லாம் என்னுள் காஞ்சனா என்பதாய் ஒரு உணர்வு .
துயரம் அதிகரிப்பது போன்ற பிரமையை என்னால் உணர முடிந்தது.
அடுத்து வந்த சில நாட்களில் பல மாறுதல்கள்.என் வாழ்வின் திசை மாற்றியது.
நான் வெளிநாடு வந்தது, அங்கு படித்த நண்பர்களுடன் தொடர்பு கொள்ளமால் போனது என பல மாற்றங்கள்.
நான் சொல்லனும் என்று நினைத்ததை காஞ்சனாவிடம் அந்த கவிதையில் சொல்லவில்லை என்பதுதான், இன்றும் எனக்குள்ள வருத்தம் .
அந்த நேரத்தில் எனக்கு புரியமாகக்கூட இருந்திருக்கலாம்.
அவ்வுணர்வை நட்பு, காதல் என இப்பவும் என்னால சொல்லமுடியல.
ஓவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு பெண்ணின் இடத்தை அடுத்து வரும் பெண்கள் நிறைவு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தது உண்டு .
ஆனால் காஞ்சனாவின் இடம் மட்டும் இன்னமும்…
அது என்னனா ஒரு தாயிடம் கிடைக்ககூடிய அன்பு போன்ற ஏதோ ஒன்றுதான் காஞ்சனாவிடம் என்னை ஈர்த்திருக்க வேண்டும்.
தாய்மையா இருக்குமோனு …,
ஆனால், என்னை விட 2 வயது தான் கூடுதலாக காஞ்சனாவிற்கு இருக்க வேண்டும்.
சகவயதினருக்குள் இந்மாதிரி உணர்வு எல்லாம் வருமா?
ஒரே குழப்பமா இருக்கு !!!
என்னனா,
காஞ்சானாவிற்கு கதை படிக்கும் பழக்கம் உண்டா இல்லையானு! ஒரே குழப்பமா இருக்கு !!!
காதலுடன்: பாண்டித்துரை