கோடம்பாக்கத்து சினிமா குத்துக்களிலிருந்து விலகாமல் தமிழ்தொலைக்காட்சிக்கான அடையாளங்களை தக்கவைத்திருக்கும் சிங்கப்பூரின் “வசந்தம்” தொலைக்காட்சி, தமிழ்சேவைக்கான பண்பலையை சமீபத்தில் அதிகரித்து “வண்ணத்திரை” என்ற புதிய தொலைக்காட்சி சேவையை தொடங்கியிருக்கிறது. ஆனால் என்னைப்போன்று தொழிற்பேட்டையில் தங்கி பணிபுரிபவர்களால் வண்ணத்திரையை காணவியலாது என்பது பெருத்த வருத்தமாக ஒன்றும் இருக்காது, திரைக்குவரும் அன்றே தங்குதடையின்றி கிடைக்கும் கள்ள தமிழ்சினிமா வட்டுக்களால்.
சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தமிழ் எழுத்து இலக்கியத்திற்கான வெளி மிகச்சிறியது. சமீபகாலமாக ”நம்மைசுற்றி நாம்” என்னும் நிகழ்வு வழியே கொஞ்சம் தொட்டுச்செல்கிறது. மற்றபடி தமிழக இலக்கிய ஆளுமைகள் வருகின்றபோது செய்திகளுக்கு இடையே கொஞ்சம் முகம்காட்டும். மேலும் சிங்கப்பூரில் பிரபலமான எழுத்தர்கள் நூல்வெளியிடும்போது கொஞ்சம் அவர்களின் நூல்பற்றிய பேச்சு என்று முடிந்துவிடும். இந்தியாவில் மொழி சார்ந்து அதிக எண்ணிக்கையில் இயங்குவது தமிழ் தொலைக்காட்சிகள் தான். அங்கேயே இலக்கியத்திற்கான இடம் என்று பார்க்கும்போது சமீபத்திய வருகையான மக்கள்தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியால் கொஞ்சம் அடையாளபடுத்தபட்டுள்ளது. அப்படி இருக்கையில் கோடம்பாக்கத்து சின்னத்திரையை ஜெராக்ஸ் செய்யும் வசந்தம், வண்ணத்திரையில் நாம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இங்கு நடைபெறும் சின்ன சின்ன நிகழ்வுகள் சிறிய மகிழ்ச்சியை தருகின்றது. அப்படி சமீபத்திய நிகழ்வுதான் ”நவரசம்”. மனிதனின் ஒன்பதுவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் இசை, நடனம் மற்றும் கவிதை என்ற மூன்று கலவையில் ஜனவரி 21 தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமை மாலை 8.00 மணியிலிருந்து 8.30மணியளவில் மார்ச் 25 வரை தொடரவிருக்கிறது.
கவிதையை எடுத்துக்கொண்டால் பயம், கோபம், அருவருப்பை உள்ளடக்கிய ஒன்பது உணர்வுகளையும் ஆண்கவிஞர் ஒருவர் பெண் கவிஞர் ஒருவர் பிரதிபலிக்கின்றனர். இங்கு பல்வேறு கவிஞர்களை அடையாளப்படுத்திய ”கவிமாலை” அமைப்பினால் கண்டடைந்த கவிஞர்கள் பலர் இந்த நவரசத்தில் ஒரு ரசத்தை எழுதி வாசித்துள்ளனர். சிங்கப்பூர் எழுத்தாளரான பாலுமணிமாறன் இந்த நவரசத்தில் கவிஞர்களை ஒருங்கிணைப்பதிலிருந்து அவர்களைப்பற்றிய குறிப்புகளை எழுதுவதில் தொடங்கி, ஒரு ரசத்தை எழுதி வாசித்ததுடன் கவிதைக்கான பணிமுழுமையையும் மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் முழுமைக்கும் இருந்து ஒளிப்பதிவினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், ஒரு குழந்தைக்கு கிடைத்த புதிய விளையாட்டு களமாகத்தான் எனக்கு தோன்றியது. அங்கு கவிதை வாசித்த ஒவ்வொருவரும் புதிதாய் ஏதோ ஒன்றை கட்டமுற்பட்டதை சிரிப்பினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். ”அருவருப்பு” என்னும் ரசத்தில் ”உயிர் வலியின் உச்சரிப்பை கொஞ்சம் கவனமாக கேளுங்கள்” என்று தொடங்கும் நான் எழுதி வாசித்த கவிதை மார்ச் 11 (புதன்கிழமை) அன்று 8.00 – 8.30 மணியளவில் ஒலிபரப்பாகிறது.
நவரசம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்குறிப்பு (Telecast Dates)
Ø Episode 1- Introduction of Navarasas by performing artists – January 21
Ø Episode 2- Sringara – காதல் – January 28
Ø Episode 3- Hasya – நகைச்சுவை – February 4
Ø Episode 4- Karunyam 3 – கருணை – February 11
Ø Episode 5- Roudram – கோபம் (ரௌத்ரம்) – February 18
Ø Episode 6- Veeram – வீரம் – February 25
Ø Episode 7- Bhayanaka – பயம் – March 4
Ø Episode 8- Bhibhastsa – அருவருப்பு – March 11
Ø Episode 9- Adbhuta – அற்புதம் – March 18
Ø Episode 10- Shantam – அமைதி (சாந்தம்) – March 25
நன்றி – வசந்தம் தொலைக்காட்சி, பாலுமணிமாறன் & team of Navarasam.