நமக்கில்லைங்க (வீட்ல ஆடி போய் ஆவணி வரட்டும் மகாலெட்டுமி மாதிரி (மாதிரியாம்க) பொண்ணு வரும்னு சொல்லிட்டாங்க) நண்பன் சதிஸ்குமாருக்கு… (22.08.2010)
திருப்பத்தூர் (சிவகங்கை) ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் B.Com முடித்து வெளியேறியபோது மனதிற்கு நெருக்கமாக கிடைத்த நண்பர்கள் இரு கைகளின் விரல்களுக்குள் அடங்கிவிடுவர். அதில் ஒருவிரல் இராமனாதபுரத்து சதிஸ்.
சதிஸ்னதும் நண்பர்கள் எல்லோருக்கும் பளிச்சுனு மனதில் தோன்றுவது அவனோட சிரிப்பும், ”சொல்லுங்கப்பு” (அந்த அப்புவும்தான்) இரண்டும் தான் என்று நினைக்கிறேன்.
கடந்த ஜனவரி வீடு குடிபுகும் நிகழ்விற்காக சென்றிருந்தபோது அம்மு சித்தியை சந்திக்க கோயம்புத்தூர் சென்றிருந்தேன், அப்போது சதீஸ் உடன் அதிகாலை நேரத்தை பகிர்ந்துகொண்டேன். உறவு சார்ந்த விரிவின் மூன்றாம் மனிதன் தனிமை படுத்திக் கொண்டதை, சிங்கப்பூர், கட்டாரி என்று பேசிக்கொண்டே காலையில் கண்ணயர்ந்துவிட்டேன். புதுமனை விழாவிற்கு நண்பன் விமலுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்திருந்தான்.
அதன் பின் நண்பர்கள் எல்லோரும் கடந்த ஜீலையில் நண்பன் சீனிவாசன் திருமணத்தில் சந்தித்துக்கொண்டனர். என்னால்தான் கலந்துகொள்ள இயலவில்லை. சிங்கப்பூர் வந்தபின்பு இவனோடு சேர்த்து மூன்று நண்பர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது (கலந்துகொள்ள இயலவில்லை).
இங்கு வந்த பின்பு அதீதமான தொலையாடல்கள் விரல்விட்டு என்னும் அளவு மின்னஞ்சல்கள் என நட்பு தொடர்கிறது. தொலையாடல் வழியே வாழ்த்து சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது (சதீஸ் திருமணத்திற்கு அம்மாவும் அக்காவும் சென்று வருவதாக சொல்லியிருக்கறார்கள்.)
சும்மா கண்ணாடிக்கா போட்டு கலக்கலா நிக்கிறது சதிஸ்னு நீங்க நெனைச்சா இல்லைங்கண்ணா அது அடுத்த விரல் ஹைடெக் சரவணன் (ஆளா பார்த்தாவே ஹைடெக் தெரியுதில்லையா) கருப்பு கலர் டீ-சர்ட் தான் புதுமாப்பிள்ளை சதீஸ்குமார். அந்த பக்கம் இருப்பது இன்னொரு விரல் அவுக பேரும் சரவணன் – (கல்லூரியில் இவர் வரைந்த டைனோசர் ஓவியம் ரொம்ப பிரபலம்)