நூல்: மாற்று சினிமா
எழுத்து : கிராபியென் ப்ளாக்
வெளியீடு: புதிய கோணம்
சாலிட்டரி
……………….
இயக்கம்: கவிஞர் Iyyappa Madhavan
ஒளிப்பதிவு : செழியன்
தயாரிப்பு: Arivu Nidhi & Pandiidurai Neethipaandi
அறையில் மிகுந்த சோர்வுடன் உறங்கிக் கொண்டிருக்கிறான் ஓர் இளைஞன். அவனது அறை இருண்டு கிடக்க, துவண்டுபோன அவனது கால்களின் வழியே மிக கவனமாக வெளிச்சம் பரவத்தொடங்குகிறது. பெர்முடாஸ் மட்டுமே அவனது உடலைப் போர்த்தியிருக்கிறது. வெளிச்சத்தின் வாசனையை முகர்ந்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தவன் சோர்வோடு ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான். தன் அருகில் இருக்கும் கனத்த இலக்கிய புத்தகம் ஒன்றை தன் அருகே வைத்துக்கொண்டு சிகரெட்டை புகைத்தவாறே சில பக்கங்களைப் புரட்டுகிறான். அதிகாலையின் அமைதி். அவனது மனம் அந்த புத்தமதத்தின் பக்கங்களில் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. புத்தகத்தை தூக்கிப்போட்டு விட்டு, வேறு ஒரு இதழை எடுத்துப் புரட்டுகிறான். அது நடிகைகளின் கவர்சிப் படங்கள் நிறைந்த கைக்கு அடக்கமான புத்தகம். மிகவும் ரசனையோடு ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாக புரட்டிப்பார்க்கிறான். பின்பு ஏதோ தோன்றியவனாக, அந்த சிறிய இதழோடு டாய்லெட்டிற்குள் சென்று வேகமாக கதவை சாத்திக்கொள்கிறான்.
அவனது படுக்கை அறையில் அவனும், வேறு ஒரு பொண்ணும் இருக்கின்றனர். இருவரின் பார்வையும் வெவ்வேறு திசை நோக்கி பதிந்திருக்கிறது. அவள் தனது மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு, இருளோடு இருளாக நிற்கிறாள். அவன் கவிழ்ந்த தலையோடு உட்கார்ந்திருக்கிறான். அறையில் கனத்த மௌனம் மட்டுமே இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவன் டாய்லெட்டிற்குள்ளிருந்து சலிப்போடு வெளியே வருகிறான். வந்தவன் வெறுப்பு மேலோங்க மிக வேகமாக அந்த இதழை சுக்கு நூறாகக் கிழித்துப் போடுகிறான். ஒரு ஜன்னலின் அருகே வெவ்வேறு விதமான காலி மது பாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் அருகே அமர்ந்தவன் ஒவ்வொரு மது பாட்டிலின் அடியில் மிச்சமிருக்கும் மதுவைக் குடிக்கிறான். அவன் கையில் இப்போது பிரபலமான இலக்கியப் புத்தகம் ஒன்று இருக்கிறது. அவற்றின் பக்கங்களைப் புரட்டியபடியே இருக்கிறான். இப்போது மறுபடியும் அவனும், அவளும் இருக்கும் காட்சி இடையில் வந்து போகிறது.
அறையிலிருந்து ஏதோ ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு வெளியேறுகிறான். அவன் இருந்த அறைக்குள் பூனை ஒன்று வெளியேற வழியின்றித் தவிக்கிறது. கையில் மது பாட்டில் ஒன்றுடன் அவன் அறைக்குத் திரும்புவதை அறிந்த பூனை இருளினுள் ஓடி ஒளிகிறது. மேசை மீது இருக்கும் ப்ளாஸ்டிக் மதுவை ஊற்றிக்குடிக்கிறான். அவனது கைகள் மிகுந்த கவனிப்புடன் இலக்கிய புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பியபடி இருக்கின்றன. ஆனால் அவன் கையில் புத்தகம் இல்லை. காற்றில் படபடக்கும் புத்தகதாள்களின் ஓசையுடன் காட்சி நிறைவு பெருகிறது.
அறையில் வெளியேற வழியின்று சிக்கிக்கொண்ட பூனையைப்போல காமம் ஒரு மனிதனின் தனிமையினுள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. புரிந்து கொள்ளப்படாத மௌனத்தின் வழியே எப்போதும் காமம் நம்மை கடந்த படியேதான் இருக்கிறது. அந்த அறை மட்டுமே அந்த இளைஞனது காமத்தை தனது கனத்த சுவர்களுக்குள் அடைகாத்து வைத்திருக்கிறது. சுவர்கள் பேசாதவரை காமம் ரகசியமே! காமத்தை மதுவின் புட்டிக்களுக்குள் அடக்க முயற்சித்தாலும் அது மூடியை உடைத்துக்கொண்டு வெளியேறியபடிதானே உள்ளது. தீராத தனிமையின் உக்கிரத்தில் மனிதனுக்கு புத்தகங்கள் மட்டுமே எப்போதும் ஆறுதல் அளிக்கும் தோழனாக இருக்கின்றன. காமத்தை கடக்கவும், தனிமையை விரட்டவும் புத்தகங்கள் மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கின்றன. கையில் புத்தகம்மே இல்லையென்றாலும் கூட, மனித மனம் காற்றில் எழுதப்பட்ட தீராத பக்கங்களை வாசித்த படியே தான் உள்ளது என்பதை வலியோடு சொல்கிறது படம்.
சினிமா என்பது காட்சி வடிவம். அதை சரியாக உள்வாங்கி இருக்கிறார் இயக்குநர் அய்யப்ப மாதவன். அவரது கவிதைகளை வாசிக்கிற உணர்வுதான் படத்தைப் பார்க்கும் போது நம்ப்பு ஏற்படுகிறது. பத்தே நிமிடங்களில் வாழ்வின் மீதான கசப்பையும் காமத்தின் மீதான குரோத்ததையும், புத்தகங்களின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறார். இது இவரின் முதல் படம். விரிவான இலக்கிய நண்பர்கள் மற்றும் திரை விமர்சனங்களுடனான நட்பில் கிடைத்த அனுபவம் காட்சிகளை அமைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. நல்ல சினிமாவுக்கான தேடுதல் அய்யப்பனிடமும் உண்டு. அவரது நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் செழியன்தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் பள்ளியில் படித்தவர். திரைப்பட ஒளிப்பதிவாளராக மாறிய பின்னும் (கல்லூரி) குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்ய தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் அவரது அர்பணிப்பிற்கு பாராட்டுக்கள். காட்சிகளை மிகுந்த வெளிஞ்சத்தோடு காட்டி அதன் தன்மையை கெடுக்காமல், இருளும், ஒளியும் கலந்த சீரான ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார். வாழ்வை தரிசிக்கிற உணர்வைக் கொடுக்கிறது இவரது ஒளிப்பதிவு.
கதையின் பாத்திரமான விஸ்வநாதன் கணேசன், தொழில் முறை நடிகரில்லை. அதனாலேயே கதையின் பாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்திப்போகிறார். தனிமையின் வலியையும், காமத்தின் இம்சைகளையும், வாழ்வை அறியத் துடிக்கிற மனோநிலையையும் மிகச் சரியான தனது உடல்மொழியால் வெளிப்படுத்துகிறார். நல்லவேளை நடிப்பிற்கு அவர் முயற்சிக்கவில்லை. சில கணங்களே வந்துபோனாலும் அந்த பூனை நம் கண்களைவிட்டு அகல மறுக்கிறது. அதே போல் அந்த பெண் நம் மனதின் ஓரத்தில் தீராவேட்க்கையோடு நின்று கொண்டேயிருக்கிறாள். மௌனத்தை இறுகி பற்றிக்கொண்டிருக்கும் அவளின் கேள்விகளுக்கு நம் யாரிடமும் பதிலில்லை. மிகச்சரியான பாத்திரத்தேர்வு.
மாமல்லன் கார்த்தியின் படத்தொகுப்பு கதையின் போக்கை சிதைக்காமல் அதன் வழியே பயணித்திருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பதை விட இந்த பத்து நிமிட குறும்படம் நம் மனதில் ஏற்படுத்தும் வலி ஆழமானது.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞரும் இயக்குநருமான அய்யப்ப மாதவன் மீராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் ‘தீயின் பிணம்’ என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும், அதன் பிறகு ‘மழைக்குப் பிறகும் மழை’, ‘நானென்பது வேறொருவன்’, ‘நீர்வெளி’, ‘பிறகொருநாள் கோடை’, ‘எஸ்.புல்லட்’, ‘நிசி அகவல்’, ‘சொல்லில் விழுந்த கணம்’ ஆகிய கவிதை நூல்களையும் ‘தானாய் நிரம்பும் கிணற்றடி’ சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், ‘குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்’ எனும் ஹைகூ கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவரது குறும்படம் ‘சாலிட்டரி’ Solitary வெளிவந்து இருக்கிறது. தமிழில் சிறப்பானதொரு முயற்ச்சி.